நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 2 ஜூன், 2017

பேர்கன் நகரில் செம்மொழித் திருநாள்!





நோர்வே நாட்டின் பேர்கன் நகரில் உள்ள தமிழ்ச்சங்கத்தின் ஆதரவுடன் பாலசிங்கம் ஜெயசிங்கம், மக்வின் யோகேந்திரன் இருவரின் ஒழுங்கமைப்பில் செம்மொழித் திருநாள் 03.06.2017 ( சனிக்கிழமை), மாலை 5 மணிக்குப் பேர்கன், வெஸ்காந்தன் கலாசார மண்டபத்தில்  (Veskanten Kultursalen) நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இலங்கை, இந்தியாவிலிருந்து சிறப்பு விருந்தினர்களும் பேர்கன் நகரத்துத் தமிழ் ஆர்வலர்களும்,  கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

தமிழ் மொழியைச் செம்மொழி என்று இந்திய அரசு அறிவித்துள்ள நிலையில் தமிழின் சிறப்புரைக்கும் மாநாடுகள், கருத்தரங்குகள் தமிழகத்திலும், பிறநாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தமிழர்கள் அதிகம் வாழும் நோர்வே நாட்டில் அமைந்துள்ள பேர்கன் நகரில் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்கும் செம்மொழித் திருநாள் 2017, சூன் மாதம் 3 ஆம் நாள் (சனிக்கிழமை) மாலை  5  மணிக்கு நடைபெறுகின்றது.

பேர்கன் நகரைச் சேர்ந்த திருமதி தோவ சிறிபாலசுந்தரம் முதன்மை விருந்தினராக வருகைதந்து, மங்கல விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடக்கிவைக்க உள்ளார்.

இந்நிகழ்வில் பேர்கன் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் ந. பூலோகநாதன் வரவேற்பு உரையாற்ற உள்ளார். இலங்கை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தகைசார் பேராசிரியர் முனைவர் . சண்முகதாஸ்செம்மொழி என்றால் என்ன?” என்ற தலைப்பிலும், ஜப்பான் நாட்டின்  டோக்கியோவில் அமைந்துள்ள கக்சுயின்  பல்கலைக்கழகத்தின்  முன்னாள் ஆய்வுப் பேராசிரியர், முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் “செம்மொழித் தமிழ் இலக்கியம்” என்ற தலைப்பிலும், புதுச்சேரி அரசின் பட்டமேற்படிப்பு மையத்தின் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் “செம்மொழியின் எதிர்காலம்” என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்ற உள்ளனர்.


ஒஸ்லோ நகரைச் சார்ந்த எழுத்தாளர் உமாபாலன் தமிழின் சிறப்பை எடுத்துரைத்துச் சிறப்புரையாற்ற உள்ளார். ஆர்த்தி உமாபாலன் நடனம், பிருந்தாவன சாரங்க இசை நிகழ்ச்சி,  ஒன்பது பாகை வடக்கு இசை எனக் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பேர்கன் தமிழ் ஆசிரியர்களுக்குச் சிறப்புச் செய்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.  பேராசிரியர் வே. தயாளன் செம்மொழி பற்றிய சிறப்புரைகளின் தொகுப்பையும், செம்மொழி தொடர்பான எதிர்காலச் செயற்பாடுகளையும் எடுத்துரைக்க உள்ளார். பா. ஜெயசிங்கம் நன்றியுரையாற்ற உள்ளார்.        

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மகிழ்தேன் ஐயா